ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

முதல் இயற்கை வேளாண் மாநிலம்

                 முதல் இயற்கை வேளாண் மாநிலம்
முன்னுரை;
    

 தலைப்பே வித்தியாசமாக உள்ளது என்று நினைக்கலாம். இன்று நாம் செயற்கையையே அதிகம் விரும்புகிறோம். இதனால் நமக்கு தீங்கு விளைகிறது.இதை உணர்ந்து கொண்ட ஒரு மாநிலம் செய்த அதிரடி முயற்சி தான் இயற்கை வேளாண்மை.இந்தியா விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். விவசாய முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு மாநிலமே அதன் முழுவிவசாயத்தையும் இயற்கை முறைக்கு திருப்பி இருக்கிறது. அந்த மாநிலத்தின் பெயர் சிக்கிம்.
விவசாயத்தின் மகிமை;
இந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். என்னதான் அரசியலில் அவர் ஜாம்பவனாக இருந்தாலும், ஐந்து முறை தொடர்ச்சியாக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர் மனதின் ஓரத்தில் விவசாயம் என்ற உன்னதம் உறங்காமல் விழிப்போடு இருந்து கொண்டே இருந்தது. விவசாயத்தை விஷமாக மாற்றும் இன்றைய நவீன விவசாயத்தில் இருந்து மாற்று விவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கண்டார். அந்த விவசாயம் இயற்கை முறையில் தான் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். அவர் தனது விருப்பத்தை 2003-ம் ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆர்கானிக் மாநிலம்;
மேலும் சிக்கிம் இனி ஒரு ஆர்கானிக் மாநிலம்என்றார். அதன்படி மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுவோர்க்கு ஒரு லட்சம் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டன. “ஆர்கானிக் ஸ்டேட் போர்டு”  என்ற வாரியம் உருவாக்கப்பட்டது. இதையெடுத்து முதலில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டி இருந்தது. அதற்காக தொடர்ந்து ஒரு பக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை தந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.
  
இயற்கை உரம் தயாரிப்பு;
 அத்தனை நிலங்களையும் இயற்கை உரங்கள் தேவை. அந்த அளவிற்கு மாநிலத்தில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனை சரி செய்வதற்கு, மாநிலம் முழுவதும் 24536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களையும், 1447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களையும் அரசு உருவாக்கியது. இயற்கை உரங்களை தயாரிக்க தாராளமாக மானியங்களை மாநில அரசு தந்தது. இயற்கை உரம் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் சொல்லிக் கொடுத்தது. அதோடு நின்றுவிடவில்லை, “சிக்கிம் ஆர்கானிக் மிஷன்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. அந்த கிராமங்களில் எல்லாம் இயற்கை வேளாண்மை முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன.
உயிர் கிராமங்கள்;

இந்த கிராமங்களை  “உயிர் கிராமங்கள்” என்று அழைத்தார்கள். இவ்வாறான தொடர் அதிரடி நடவடிக்கையால் 2009-ம் ஆண்டு இறுதியில் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறின. அப்போது மற்றொரு அறிவிப்பையும் பவன்குமார் வெளியிட்டார். இனி சிக்கிம் மாநிலத்துக்கு ரசாயன உரக் கோட்ட வேண்டாம். அதற்கான மத்திய அரசின் மானியமும் வேண்டாம் என்றார். மாநிலத்தில் ரசாயன உரத்துக்கான அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எப்படிப்பட்ட உன்னத திட்டங்களும் அதனை தொடர்வதற்கான ஆராய்ச்சிகளும், ஆய்வு முறைகளும் இல்லாததால் பலன் தாராமல் தோல்வி அடைந்துவிடுகிறது. இதை கச்சிதமாக புரிந்து கொண்ட சிக்கிம் அரசு “சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் பார் ஆர்கானிக் பார்மிங்” ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியது.
தீர்க்கப்பட்ட சிக்கல்கள்;
அதன் மூலம் சிக்கல்கள் அவ்வப்போது தீர்த்துவைக்கப்பட்டன. இத்தனையும் போர்கால அடிப்படையில் செய்ததால் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலம் நஞ்சில்லா விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமியாக மாறியது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்தாலும் நாட்கள் செல்ல செல்ல சிக்கிம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை புரிந்து கொண்டார்கள். இன்றைக்கு சிக்கிமில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை வாங்க உலக நாடுகள் தவம் கிடக்கின்றன. இவ்வாறக, சிக்கிம் மாநிலம், நாட்டின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
முடிவுரை;
உலக நாடுகள் சிக்கிமை திரும்பி பார்க்க முக்கிய காரணமாக அமைந்தது இயற்கை விவசாயம் தான். ஆனால் இயற்கை விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நாமோ நவின விவசாயத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயத்திற்கு எப்போது நாம் திரும்புகிறோமோ அந்த நாள் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நம் நாடும் மாறும் என்பது உறுதி.

5 கருத்துகள்:

  1. உண்மை தான் தோழி இன்று எங்கு பார்த்தாலுமே செயற்கை தான்.யோசிக்க வேண்டிய விஷயம்..!!!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கட்டுரை.. பாராட்டுகள்..அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. பகிரந்து கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி.இது போல் எங்கள் மாணவிகளை தொடர்ந்து ஊக்குவிக்க கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு